கிறிஸ்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

வழிபாட்டு உரிமைகளை மீட்டுத்தரக்கோரி திருப்பூரில் கிறிஸ்தவர்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறோம்சுய லாபத்துக்காக சிறுபான்மையினர்கள் மீது வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் நிறுவனர் சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறோம்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே தங்களது சுய லாபத்துக்காக சிறுபான்மையினர்கள் மீது வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் புகுந்து மதபோதகர்களைத் தாக்குவது, ஜெபவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், பொருள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் பல சபை வழிபாடுகளுக்காக கட்டடம் கட்டவும், வழிபாடு நடத்தவும் அனுமதி கோரி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுக்கள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் வீடு கட்டுவதற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் அனுமதி கேட்டால் வழிபாடு நடத்தமாட்டேன் என்று எழுதிக்கேட்கிறார்கள்.

ஆகவே கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எங்களது வழிபாட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.