கோப்புபடம்.  
உள்ளூர் செய்திகள்

சிறந்த நீர் மேலாண்மை திட்ட விருது போட்டியில் இடம் பிடித்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம் இணையவழியில் ஓட்டுப்பதிவு செய்யலாம்

2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது

திருப்பூர் :

மக்களின் சமூக மேம்பாட்டுக்கு பயன்தரும் வகையில், நாடு முழுக்க செயல்பட்டு வரும் தனி நபர்கள், பொது மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் அவரவர் துறை சார்ந்து சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஸ்கோச் என்ற அமைப்பு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. பல துறைகளை சேர்ந்த வல்லுனர்களை தேர்வாளர்களாக கொண்டுள்ள இந்த விருதுக்குழு தற்போது சிறந்த நீர் மேலாண்மை திட்டத்தை தேர்வு செய்து வருகிறது. இதற்கான போட்டி கடந்த 12ந் தேதி துவங்கியது. தமிழக அளவில் 6 நீர் மேலாண்மை திட்டங்கள் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டுள்ளது.இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,752 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டமும் இடம் பிடித்துள்ளது.

மேலும் தாமிரபரணி- நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டம், மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டம்,திருச்சி முக்கொம்பு கதவணை திட்டம், நாகபட்டினம், ஆதனூர் -குமாரமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் திட்டம், கரூர் அருகே காவிரியாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களும் போட்டிக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளன.முதற்கட்டமாக இத்திட்டங்கள் சார்ந்த விரிவான அறிக்கையை நீர்வளத்துறை அதிகாரிகள், விருது கமிட்டியிடம் சமர்பித்துள்ளனர். இரண்டாம் கட்டமாக இத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை அறிந்துகொள்ளும் வகையில் இணைய வழி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.இன்று வரை ஓட்டளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT