திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழா நடந்தது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் மூலம் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்து துண்டு பிரசுரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காந்தி சிலை முன்பு நடைபெற்றது.

திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசியதாவது:-

ஆண்டுதோறும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது விபத்துக்களால் கை கால் இழந்தவர்கள் உயிரிழந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் வாகனத்தை கவனத்துடன் சாலை விதிகளை மதித்து ஓட்ட வேண்டும், டிரைவர் உரிமம் இல்லாத எந்த நபரும் வாகனம் ஓட்ட கூடாது.

18 வயது பூர்த்தி அடையாத எந்த நபரும், மோட்டார் வாகனம் ஓட்ட கூடாது.விதி மீறுவோருக்கு உரிமையாளரே பொறுப்பாளர் ஆவார்.

18 வயது பூர்த்தி அடையாத எவரையும் வாகனம் ஓட்ட அனுமதித்தால் அவர் 3 மாதம் சிறை தண்டணை அல்லது ரூ.1000 அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

உரிமம் பெற்று வாகனம் ஓட்ட வேண்டும். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும். வாகனத்தை அதிக வேகம் மற்றும் அபாயகரமாக இயக்க வேண்டாம்.

குடி போதையில் வாகனத்தை இயக்க வேண்டாம். சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். அதிக பாரம், உயரம் ஆட்களை ஏற்ற வேண்டாம். வாகனத்தின் சுமைகளின் மேல் ஆட்களை ஏற்ற கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலை நிகழ்ச்சியின் மூலம் மேளம் மற்றும் மயில், மாடு, ஆகிய வேடத்தில் வாகன விழிப்புணர்வு குறித்து பாட்டுக்களை பாடி ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் இன்ஸ்பெக்டர் துரைசாமி சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், செல்வராஜ் பலராமன் உடனிருந்தனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது 18 வயது முழுமை அடையாத சிறுவன் மற்றொரு சிறுவனை வாகனத்தில் உட்கார வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டி வந்தார். வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.