உள்ளூர் செய்திகள்

வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ

பூஜை செய்து வழிபாடு அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

ஜோலார்பேட்டை:

பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படம் எடுத்திருப்பது போன்றும் காணப்படும். இந்த பிரம்ம கமலம் பூ ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய பூவாகும்.

இந்த பூ இலையில் இருந்தே பூ பூக்கிறது. இரவு நேரங்களில் மட்டுமே பிரம்ம கமலம் பூ மலரத் தொடங்கும் அதனை பார்ப்போருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் எனவும் பெரியோர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த பிரம்ம கமலம் பூ ஹிமாலயாவிலேயே அதிகம் காணமுடியும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவர் தனது வீட்டில் பிரம்ம பூ செடி வளர்த்து வருகிறார்.

நேற்று இரவு ஒரு பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இதன் காரணமாக ஜெயகுமார் குடும்பத்தினர் பிரம்ம கமல பூச்செடிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

மேலும் பிரம்ம கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.