நெல்லை:
டவுன் குறுக்குத் துறை வழியாக தாமிரபரணி ஆறு செல்கிறது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து குளித்து செல்கின்றனர்.
மேலும் கோவில் கொடை விழா சமயங்களில் தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் இங்கிருந்து நீர் எடுத்துச் செல்வது வழக்கம்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த ஆற்று பகுதியில் சில கல் மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் பெண்களுக்கு உடை மாற்றவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த கல் மண்டபங்களின் மேல் செடிகள் முளைத்தும், மண்டபம் சிதைந்து அழியும் நிலையிலும் உள்ளது. மேலும் ஆற்றின் தென் பகுதியில் உள்ள ஒரு கல் மண்டபத்திற்கு செல்ல கல்லினால் ஆன சிறிய பாலம் ஒன்று இருந்தது.
அது கடந்த வருடம் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்து விட்டது. இதனால் குளிப்பதற்கும், தர்ப்பணம் கொடுப்பதற்கும் வரும் மக்கள் ஆற்று நீரின் ஆபத்தை அறியாமல் ஆற்றில் இறங்கி சென்று வருகின்றனர்.
பழமை வாய்ந்த சிறிய ஆற்று பாலத்தை சரிசெய்யவும்,கல் மண்டபங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள செடிகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.