களக்காடு:
களக்காடு தலையணை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிவபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் விளைநிலத்தின் அருகிலேயே வீடு கட்டி குடும்பத்தினர்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது வீட்டு முன்பு சிறுத்தை புகுந்து, நாயை கவ்வி பிடித்து கொண்டிருந்தது. இதனால் நாய்கள் சத்தம் போட்டன.
இதைக்கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்த ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை நாயை கவ்வி பிடித்தபடி நின்று கொண்டிருந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் டார்ச் லைட்டுகளை அடித்தும், சத்தங்களை எழுப்பியும் சிறுத்தையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சிறுத்தை நாயை போட்டு, விட்டு, அங்கிருந்து தப்பி, ஓடி மறைந்தது. சிறுத்தையின் பிடியில் இருந்து படுகாயத்துடன் தப்பிய நாய் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது.
சிறுத்தை அட்டகாசத்தால் சிவபுரம், கள்ளியாறு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கூட தனியாக வெளியே வர அஞ்சுகின்றனர்.
கடந்த 10 நாட்களில் மட்டும் 7 நாய்களை சிறுத்தை அடித்து கொன்று தூக்கி சென்றுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே கிராமத்திற்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் கீழவடகரை பகுதியில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.