நெல்லை:
இளம்பிள்ளை வாதம் நோயை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் போலியோ சொட்டுமருந்து முகாமிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பஸ் நிலையம், ரெயில் நிலையம், இடம் பெயர்ந்து வாழும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகள், செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகள், சுங்கச்சாவடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 918 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து நாளை வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே போலியோசொட்டு மருந்து கொடுக்கப்பட்டு இருந்தாலும், மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாநகர பகுதியிலும் நாளை 108 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாளை மருந்து வழங்கப்படாத விடுபட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் பணியாளர்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 1.17 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், சோதனை சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங் களில் முகாம்கள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 1.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
மொத்தம் 1,222 மையங்களில் நடைபெற உள்ள இந்த முகாமில் 5, 379 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.