களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள மின்சார வாரியம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒருவர் வெள்ளை நிற பையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். இதனைதொடர்ந்து அவர் போலீசாரை அவதூறாக பேசினார். மேலும் பாட்டிலால் அடித்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். இருப்பினும் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் சிங்கிகுளம், நவீன்நகரை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பது தெரியவந்தது. அவர் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 16 மது பாட்டில்களும், ரூ.4,850 பறிமுதல் செய்யப்பட்டது.