கல்லிடைக்குறிச்சி:
மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி முதல் மாமன்ற கூட்டம் தலைவர் அந்தோணியம்மாள் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு) சத்தியதாஸ் முன்னிலை வகித்தார்.
அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் விக்டர் செல்வராஜ் தீர்மானங்களை வாசித்தார்.
அனைத்து உறுப்பினர்களும் கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதேபோல் மக்களின் அடிப்படை அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
மணிமுத்தாறு பேரூராட்சி (5 வார்டு பகுதிகள் ) மாஞ்சோலை எஸ்டேட்டில் உள்ளது. இங்கு அதிகமான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் சென்று வர வனத்துறை அனுமதிக்க வேண்டும் எனவும், சாலை வசதி ஏற்படுத்திக்-கொடுக்கவும் கேட்டுக்கொண்டனர்.
பொது மக்கள் தேவை அறிந்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என செயல் அலுவலர் உறுதி அளித்தார். முடிவில் துணை தலைவர் பண்டாரம் நன்றி கூறினார்.