நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட நெல்லை, தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் மேயர் சரவணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புட்டாரத்தி அம்மன் கோவில் பகுதியில் ஆய்வு செய்த போது அங்குள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
உடனடியாக தச்சை மண்டல சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில், சுகாதார பணியாளர்கள் அதனை சீர் செய்தனர்.
அடைக்கல மாதா தெருவில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருந்ததால் அங்கிருந்த மேடு, பள்ளங்களில் நடந்து செல்ல முடியாமல் முதியோர்களும், மாணவ- மாணவிகளும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து சுகாதார பணியாளர்களை கொண்டு உடனடியாக அந்த சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
மேலும் அனவரத விநாயகர் கோவில், கருவேலன்குண்டு தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, அக்கசாலை விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை அடைப்புகள் சீரமைக்கப்பட்டது. சில இடங்களில் கழிப்பிடங்கள் பயன்பாடற்று கிடந்தது.
இதனைப் பார்த்த மேயர் சரவணன் அதனை இடித்து இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடம் அமைக்க பரிசீலனை செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாட்டு தொழுவங்களில் உள்ள சாணங்களை முறையாக அப்புறப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது உதவி கமிஷனர் (நிர்வாகம்) வெங்கட்ராமன், செயற்பொறியாளர் பைஜூ மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.