நெல்லை சந்திப்பு பகுதியில் ஒரு பெண்ணுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிசோதனை செய்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இன்று முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை

நெல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, சாலையில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்தது.

இன்று காலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வெளியான பரிசோதனை முடிவில் 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 569 பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 49 பேர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். 

இன்று நெல்லையில் பாதிக்கப்பட்டவர்களில் மாநகர பகுதியில் 176 பேர் உள்ளனர். இதுதவிர ராதாபுரத்தில் 115 பேருக்கும், வள்ளியூரில் 76 பேருக்கும், பாளையில் 59 பேருக்கும் தொற்று உறுதியானது.

அம்பையில் 42 பேருக்கும், மானூரில் 37 பேருக்கும், நாங்குநேரியில் 51 பேருக்கும், சேரன்மகாதேவியில் 34 பேருக்கும், களக்காட்டில் 33 பேருக்கும், பாப்பாக்குடியில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறையினர் சென்று அவர்களுக்கு பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்து அதற்கேற்ப வீட்டு தனிமை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை எடுக்கப்படுகிறது. அந்த தெருக்களிலும் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட நடவடிக்கையிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றும் மாநகர பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர். 

அதேநேரத்தில் மாநகர பகுதியில் சந்திப்பு, வண்ணார்பேட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியதவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ குழு மூலம் கொரோனா பரிசோதனை செய்தனர்.