வண்ணார்பேட்டையில் நடந்த கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

நெல்லையில் இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.

மாலை மலர்

நெல்லை:

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஒரு ஆண்டில் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நெல்லை மண்டலத்திற்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் இதுவரை ஒட்டுமொத்தமாக 5,349 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 9,237 ஏக்கர் நிலபரப்பு பயன்பெறும்.

நெல்லை மின்பகிர்மான வட்டத்தில் மொத்தம் 3,423 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 1,154 மின் இணைப்புகளும், தென்காசி மாவட்டத்தில் 2,269 மின் இணைப்புகளும் அடங்கும்.

தற்போது இந்த 5 மாவட்டங்களிலும் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

இதற்காக மொத்தம் 13 மையங்களில் காணொலி காட்சி மூலமாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் சீதபற்பநல்லூர், வள்ளியூர் ஆகிய இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, தென்காசி ஸ்ரீநல்லமணி யாதவா கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் என மொத்தம் 5 கல்லூரிகளில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை வண்ணார்-பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு,  மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ.,  மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ஞானதிரவியம் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி வரவேற்றார். முடிவில் தலைமை பொறியாளர் செல்வக்குமார், மேற்பார்வை பொறியாளர் ராஜன் ராஜ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள்  முத்துக்குட்டி (நகர்புறம்), சுடலையாடும் பெருமாள் (கல்லிடைக்குறிச்சி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.