பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடியில் அரசு மருத்துவமனை பஸ் நிலையத்திற்கு கீழ்புறம் உள்ளது. இங்கு இன்று காலையிலிருந்தே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இங்கு சொட்டு மருந்து கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிறந்து சில மாதங்களே ஆன தங்களது குழந்தையை காரில் அழைத்து வந்தனர். மருத்துவமனை வாசல் அருகே வரும்போது அங்கிருந்த கால்வாய் பள்ளத்தில் கார் இறங்கியது.
அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கிருந்தவர்கள் காரை தூக்கி பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.