அரசு பஸ் நடத்துனரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள். 
உள்ளூர் செய்திகள்

லைசென்ஸ் இல்லாமல் பணியாற்றிய அரசு பஸ் டிரைவர்கள் சிக்கினர்

நாங்குநேரியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மாலை மலர்

வள்ளியூர்:

நெல்லை-நாகர்கோவில் மார்க்கத்தில் அரசு பஸ்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமல் இயக்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

 இந்நிலையில் நெல்லை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் நடராஜ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குழுவினர் நாங்குநேரியில் மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நின்று ஆய்வுமேற்கொண்ட போது புறவழிச்சாலையில் சென்ற பல அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஊருக்குள் திருப்பி விடப்பட்டன.

மேலும் பல்வேறு பஸ்களில் வந்த அரசு பஸ்நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சட்டையில் பெயர் வில்லை அணியவில்லை.

லைசென்ஸ் உள்ளிட்ட எந்த ஆவணமும் முறையாககையில் வைத்திருக்கவில்லை என்பதும் தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வழித்தட இயக்கம் குறித்த அரசு ஆணை உள்ளிட்ட முறையான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. மேலும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத சில நடத்துனர்களிடம் லைசென்சை பறிமுதல் செய்தனர்.

சில அரசு பஸ்களை ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு அறிவுறுத்தி நாங்குநேரி வழியாக திருப்பி விட்டனர்.