திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 6.45 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் முத்துராமன் வல்லவராயர் கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
அடுத்த மாதம் பிப்ரவரி 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.10 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்தில் நடக்கிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், திருவிழா கிளார்க் பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.