கோவை:
கோவை துடியலூர் காவல் நிலையம் அருகே செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது64). இவரது பேத்தி தேஸ்சுராணி(15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று ராமசாமி தனது பேத்தியுடன் துடியலூர் பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக ஆட்டோ ஒன்று வந்தது. வந்த வேகத்தில் ஆட்டோ ராமசாமி மற்றும் அவரது பேத்தி மற்றும், அந்த பகுதியில் நடந்து சென்ற மற்றொரு முதியவர் மீது மோதி அங்கிருந்த சாக்கடையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரும் சாக்கடைக்குள் விழுந்து காயம் அடைந்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள் வேகமாக வந்து 4 பேரையும் மீட்டனர். மேலும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காயம் அடைந்த ராமசாமி, அவரது பேத்தி தஸ்சுராணி, கோத்தகிரியை சேர்ந்த ராமன் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து குளிக்க வைத்து வேறு சட்டை கொடுத்து மாற்ற வைத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆட்டோவை ஓட்டி வந்தது தொப்பம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ்(40) என்பதும், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக நேற்று தான் பழைய ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
மேலும் ஆட்டோவை வாங்கி வரும்போது மது அருந்திவிட்டு போதையில் அதிக வேகமாக ஆட்டோவை ஓட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் குடித்துள்ளாரா என்பதை கண்டறிய மது குடித்ததை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். ஆனால் போலீசாருக்கு டப்பு கொடுக்கும் வகையில் அந்த கருவியை வாயில் வைக்கும்போது ஊதுவது போல் நடித்து ஊதாமல்தவிர்த்தார். பல முறை முயற்சி செய்த போலீசார் ஒரு வழியாக எடுத்துமுடித்தனர். இந்த சம்பவம் குறித்து மோகன்ராஜ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.