தூத்துக்குடி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதியதாக கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்காரணமாக தூத்துக்குடி பழைய பஸ் நிலையமானது, அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையறிந்த மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நேற்று மாநகராட்சி அதிகாரிகளுடன் தற்காலிக பஸ் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பஸ் நிலைய வளாகம் முழுவதும் நடந்து சென்றபடி ஆய்வு மேற்கொண்ட மேயர் ஜெகன்பெரியசாமி பயணிகளிடம் தற்காலிக பஸ் நிலையத்திலுள்ள குறைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.
பயணிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தற்காலிக பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பைப்புகள் இரண்டும் செயல்ப டவில்லை என்பதைக்கண்ட மேயர் ஜெகன்பெரியசாமி அதனை உடனடியாக சரி செய்திட மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் ஒரு மணிநேரத்தில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் இரண்டில் ஒன்றை சரி செய்து பயணிகளுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தனர். மற்றொரு குடிநீர் கருவியை சரி செய்யும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி தற்காலிக பஸ் நிலையத்தின் உள்ளே கழிவுநீர் மற்றும் குப்பைகள் சேராத வகையில் அதிகாரிகள் கண்காணித்திடவேண்டும். நிழற்குடை, இருக்கை, கழிவறைகள் உள்ளிட்ட பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் துரிதமாக செய்து கொடுத்திடவும் அதிரடியாக உத்தரவிட்டார். மேயருடன், அவரது உதவியாளர்கள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் உடன் சென்றனர்.