பாளை கே.டி.சி. நகரில் பாதயாத்திரை சென்ற பக்தர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூசம்

முருகப்பெருமானின்ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை தைப்பூச திருவிழா நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின்ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை தைப்பூச திருவிழா நடக்கிறது.

விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம் உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீர்த்த வாரி என அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதிப்படி கோவில் வளாகத்தில் நடக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த 14-ந்தேதியில் இருந்து நாளை வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

தொடர்ந்து 5 நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை என்பதால் லட்சக்கணக்கான பக்தர் கடந்த 13-ந்தேதியே கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

வழக்கமாக தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் வழிபாடு நடத்துவது வழக்கம்.

தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் கோவில் வளாகத்துக்குள் வராமல் இருக்க கோவில் நுழைவு வாயில் டோல் கேட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.