மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

கயத்தாறு அருகே மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

கயத்தாறு அருகே மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மாலை மலர்

கோவில்பட்டி:

மண் பரிசோதனை செய்து மண்ணின் தோன்றும் குறைகளை சீராக்கிட மண்ணில் உரச்சத்து இருப்பை அறிந்து கொண்டு உரங்களை தேவைக்கேற்ப இடவும் மண் பரிசோதனை தேவைப்படுகிறது. 

தற்போது பயிர் அறுவடை முடிந்து கோடை உழவு நடைபெற உள்ள நிலையில் மண் மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பிடல் வேண்டும் என தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் கேட்டு கொண்டிருந்தார்.  

மேலும் கோவில்பட்டி நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் கிராமங்களுக்கு சென்று மண் மாதிரிகளை ஆய்வு செய்து உரப்பிந்துரைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 வட்டாரங்களில் உள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்  கடந்த 8-ந் தேதி முதல் மண் மாதிரிகள் சேகரிக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி கயத்தாறு வட்டாரம் சிதம்பராபுரத்தில் மண் பரிசோதனை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

முகாமில் மண்மாதிரி எடுக்கும்முறை, மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண்வள அட்டை குறித்து நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் லலிதாபரணி, செல்வமாலதி, சத்யபாரதி, துணை வேளாண்மை அலுவலர் பரமசிவம் ஆகியோர் பேசினர். 

முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்துமாரி, முத்துராஜ், சுப்புலெட்சுமி மற்றும் ஆய்வக உதவியாளர் செண்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் பலரும் தங்களது நிலங்களிலிருந்து மண் மாதிரிகளை கொண்டு வந்து ஆய்வு செய்து பயன்பெற்றனர்.