தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் ஆத்தங்கரையான் (வயது 52). பட்டறை வைத்து நகை தொழில் செய்து வரும் இவர் கடந்த 5 வருடமாக பாளை பெருமாள் வடக்குத் தெருவை சேர்ந்த சீனிவாசன் (40) என்பவரிடம் தொழில் ரீதியாக பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சீனிவாசன் தன்னிடம் தங்க நகைக்கு வைக்கக்கூடிய விலை உயர்ந்த கற்கள் இருப்பதாக கூறி ஆத்தரங்கரையானிடம் ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கற்களை கொடுத்துள்ளார்.
பின்னர் 45.5 கிராம் எடையுள்ள அந்த கற்களை ஆத்தங்கரையான் சோதனை செய்து பார்த்ததில் அது சாதாரண கற்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர் பணத்தை திருப்பி தருமாறு சீனிவாசனிடம் கேட்ட போது சீனிவாசன் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆத்தங்கரையான் அளித்த புகாரின் பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தார்.