தூத்துக்குடி:
போலியோ சொட்டு மருந்து இளம்பிள்ளை வாதம் என்ற நோயை தடுக்கும் தடுப்பு மருந்தாகும். போலியோ சொட்டு மருந்து இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால் கடந்த 12 ஆண்டுகளாக போலியோ நோய் தாக்கம் இல்லாமல் உள்ளது.
இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ஒரே தவணையாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 1,222 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப் படுகிறது. இந்த முகாம்களில் 5,379 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
அதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 34 ஆயிரத்து 199 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனை, வட்டார சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெற உள்ளது.
மேலும் 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்ளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயன்பெறலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டு உள்ளார்.