அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீருடைகள் வழங்கினார்.

திருச்செந்தூர்:

-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் தூத்துக்குடி மண்டல இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், செட்டியாபத்து சிதம்பரேஸ்வரர் கோவில், தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், ஸ்ரீவைகுண்டம் கண்ணபிரான் கோவில் போன்றவற்றில் பணியாற்றும் 254 கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணியாளர் களுக்கு சீருடை கள் மற்றும் புத்தாடைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, மண்டல உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் நிர்வாக அலுவலர் ராம சுப்பிரமணியன், செட்டியாபத்து சிதம்பரேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் ராதா, தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் நிர்வாக அலுவலர் காந்திமதி, சாத்தான்குளம் சரக ஆய்வாளர் பகவதி,

தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், திருச்செந்தூர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.