ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து 13 நாட்கள் தினசரி காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து, அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து தேரில் சுவாமி நம்மாழ்வார் காலை 7.30 மணிக்கு எழுந்தருளினார். காலை 8.30 மணிக்கு ஆழ்வார் திருநகரி எம் பெருமானார் ஜீயர் ஆச்சாரிய குருக்கள் மற்றும் ஆச்சாரிய குருக்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என கரகோஷத்துடன் நான்கு ரத வீதிகள் வழியாக தேர் இழுத்து வரப்பட்டு மதியம் நிலையை வந்தடைந்தது. 

நிகழ்ச்சியில் செயல் அலுவலர் அஜித், ஸ்ரீ ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா தலைவர் ரொங்கராஜன், ராஜப்பா வெங்கடாச்சாரி, ஆழ்வார்திருநகரி நகர அ.தி.மு.க. செயலாளர் செந்தில் ராஜகுமார்  மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்யம் சபா மற்றும் காரிமாறன் கலைக் காப்பகத் தினர் செய் திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி. வெங்கடேசன், ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.