கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

கயத்தாறு தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை கனிமொழி எம்.பி. தத்தெடுத்தார்- சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அறிவிப்பு

கயத்தாறு தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை கனிமொழி எம்.பி. தத்தெடுப்பதாக சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கூறினார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

 தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திகுளத்தில்  சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில்  கனிமொழி எம்.பி., அமைச்சர்  கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ்,  மாநகராட்சி  மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

 தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவதற்காக நான் இந்த வருடம் இந்த ஊராட்சியை தத்தெடுத்திருக்கிறேன்.  அதற்கு முக்கிய காரணம் பஞ்சாயத்து தலைவர் செல்வி என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். எத்தனை தடை வந்தாலும் என்னுடைய வேலையை நான் செய்வேன் என்று உறுதியோடு செல்வி பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். 

எனவே அடுத்த ஆண்டு இந்த பஞ்சாயத்துக்கு விருது வாங்கப்படும் என்ற உணர்வோடு நீங்கள் அனைவரும் பஞ்சாயத்து தலைவருக்கு உறுதுணையாக இருந்து சாதி, மத வேறுபாடின்றி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அரசாங்கத்தின் வாயிலாக கிடைக்கப்பெற வேண்டிய உதவிகளை பெற்று தருவதற்கு நாங்கள் அனைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.   

100 நாள் வேலை திட்டத்தில் நீண்ட காலம் பணியாற்றி வருபவர்களை மாற்றி அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கூட்டத்தில் ஆர்.டி.ஓ. சங்கரநாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, துணைத்தலைவர்  லெட்சுமி, ஊராட்சி செயலர் சக்கம்மாள், ஒன்றிய கவுன்சிலர்  வெயில்முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்  பானு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  ருக்குமணி, உதவி செயற்பொறியாளர்  ரெஜினால்டு ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.