கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினத்தில் திருக்குரானை 12 மணி நேரம் ஓதி சாதனை படைத்த மாணவி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 12 மணி நேரம் இடைவிடாமல் திருக்குரானை ஓதி பிளஸ்-1 மாணவி சாதனை படைத்துள்ளார்.

மாலை மலர்

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு திருக்குரானை மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.

முகைதீன் மத்ரசா அரங்கில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில் காயல்பட்டினம் அகமது முகைதீன்-முகைதீன் பாத்திமா தம்பதியினரின் மகளான பிளஸ்-1 மாணவி கதீஜா நுஸ்பா பங்கேற்றார்.

இந்த மாணவி, கல்லூரி நிறுவனர் அகமது அப்துல் காதிர் ஆலிம் மற்றும் மார்க்க அறிஞர்கள், ஆசிரியைகள் முன்னிலையில் திருக்குர்ஆன் ஒப்புவிக்க  தொடங்கினார்.

காலை 6.30 மணிக்கு தொடங்கி திருக்குர்ஆனின் 890 பக்கங்களை கொண்ட வசனங்களை 12 மணி நேரம் இடைவிடாமல் ஓதி மாலை 6.30 மணிக்கு நிறைவு செய்தார்.

இதேபோல் 2-வது நாள் நிகழ்ச்சியில் காயல்பட்டினம் செய்கு முகமது சாலிஹ் - மர்ஹூமா ஹாபிளா ஜுவைரியா பீவி தம்பதியரின் மகளான பிளஸ்-1 மாணவி முகமது ரபியா ராஹிமா பங்கேற்றார்.

இவர் திருக்குரானை ஒப்புவித்தலை காலை 6.45 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு நிறைவு செய்து சாதனை படைத்தார்.

திருக்குரானை மனப்பாடம் செய்து இடைவிடாமல் ஓதி சாதனை படைத்த இந்த 2 மாணவிகளை பாராட்டி வரும் 9-ந் தேதி நடைபெறும் கல்லூரியின் ஆண்டு விழாவில் ‘தங்க நங்கை’ விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.