தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி பவானி (வயது 62). நேற்று பவானி மட்டும் வீட்டில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் சிலர் பீரோவை திறந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
சத்தம் கேட்டு பவானி விழித்து எழுந்து சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், பவானியை உருட்டுக்கட்டையால் தாக்கி அவரது கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்துக் கொண்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம்பண்ணையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). நேற்று தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்த அவரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றனர்.
தூத்துக்குடியில் ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவ இடங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் கைரேகை பிரிவு உதவி இயக்குனர் கலாலட்சுமி தலைமையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் ‘பியா’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது.
சம்பவ இடங்களின் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக சிப்காட் மற்றும் வடபாகம் இன்ஸ்ªக்டர், சப்&இன்ஸ்பெக்டர் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் மூதாட்டியை கொன்ற மர்மநபர்கள் யார்? என்றும் முத்துப்பாண்டியை கொன்றவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி மர்மகும்பல்களை வலைவீசி தேடி வருகின்றனர்.