உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நில ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள அழைப்பு

இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. பி.எம்.கிசான் திட்ட பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் பிரதமந்தி ரியின் கவுரவ நிதி திட்ட மானது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

12-வது தவணை

இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஆவண சரிபார்ப்பு பணி

பி.எம்.கிசான் திட்ட பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

பிரதமரின் கவுரவ நிதி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காண்பித்து சரி செய்து கொண்டால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தகுதியான விவசாயிகள் அனைவரும் தாமாகவே முன்வந்து நில ஆவணங்களை சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திடவும், பி.எம்.கிசான் வலைதளத்தில் இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.