திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், பள்ளி மேலாண்மைக் குழுதலைவர் பிரபாவதி, பெற்றோர்ஆசிரியர் சங்கபிரதிநிதிகள், உள்ளாட்சிஅமைப்பின் பிரதிநிதிகள், பள்ளி
ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
கல்விஉரிமைச்சட்டம் 2009-ன் படி பள்ளி முன்னேற்றத்திற்காகவும், பள்ளிவளர்ச்சிக்காகவும் பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. நம் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது.
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகிறது. அதன் பொருட்டு பள்ளி மேலாண்மைக் குழுவின் அவசியம், உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் ஒளிவு மறைவற்ற முறை ஆகியவற்றினை அறிந்து கொள்ள பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது.
பள்ளி மேலாண்மைக்குழுவில் மொத்தம் 20 உறுப்பினர்கள் இருக்க
வேண்டும். இதில் 75 சதவீதம் , அதாவது 15 உறுப்பினர்கள் பெற்றோர்களாக இருக்கவேண்டும். அதில் குறைந்தபட்சம் 10 பெண் உறுப்பினர்கள் கட்டாயமாக இடம் பெறவேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் 945 அரசுபள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உள்ளது. ஒருபள்ளியின் வளர்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கு மிக முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.