முதன்மை திட்ட பயிற்சி முகாம். 
உள்ளூர் செய்திகள்

நெடும்பலத்தில் முதன்மை திட்டப் பயிற்சி முகாம்

நெடும்பலத்தில் முதன்மை திட்டப் பயிற்சி முகாம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் பட்டியலின, பழங்குடி இனத்தவர்களுக்கான முதன்மை திட்ட பயிற்சி முகாம் இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை மற்றும் சமூக நீதி அதிகாரம் அளிக்கும் அமைச்சகத்தின் சார்பில் நெடும்பலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தங்கராசு தலைமை வகித்தார் பாரத மாதா சேவை நிறுவனங்களின் இயக்குனர் எடையூர் மணிமாறன், உதவித் தலைமையாசிரியர் அன்புகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் தனபாலன் வரவேற்று பேசினார். சென்னை முட்டுக்காடு மத்திய அரசின் பல்வகை மாற்றுத் திறனுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தின் நோடல் ஆபீசர் டாக்டர் தனவேந்தன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

முகாமில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நிபுணர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சாதிய வன்கொடுமை தடுப்பு முறைகள், மருத்துவ பயிற்சிகள், ஆரம்ப கால ஊணங்களை சரி ஆக்குதல் குழந்தை வளர்ப்பு, ஆதிதிராவிடர்களுக்கு பாதுகாப்பு சட்டங்கள் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு கல்வி ஒன்றே ஆயுதம் என பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அரசு தாயுமானவன், உளவியல் நிபுணர் அக்பர், சிறப்பாசிரியர் சுகுமார், பட்டதாரி ஆசிரியர்கள் யோகராஜ், சாந்தி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். கலந்துகொண்ட 50 மாணவ&மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. பாரதமாதா சேவை நிறுவனங்களின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அபிநிஷா, கார்த்திகேயன், பிரபுதாசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

முடிவில் உதவித் தலைமையாசிரியர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.