திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவில் 78-ம் ஆண்டு திருவிழாவில் தெப்ப திருவிழா தேளிகுளம் பிள்ளையார்கோவில் குளத்தில் நடைபெறுவதையொட்டி குளத்தில் மண்டிக்கிடக்கும் வெங்காய தாமரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி முள்ளாச்சிமாரியம்மன் கோவில் பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.வரும் 19-ந்தேதி வெண்ணைத் தாழியும் , வரும் 20-ந்தேதி முக்கிய திருவிழாவான காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், முடி எடுத்துக்கொள்ளுதல், அபிஷேகம், ஆராதனை, மாலை காவடிகளுடன் தீ மிதித்தல், பிரார்த்தனை காவடி அபிஷேகமும் நடைபெறுகிறது.
தொடர்ந்து 22-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுவதை யொட்டி தெப்பத் திருவிழா நடைபெறும் தேளிகுளம் பிள்ளையார்கோவில் குளத்தில் வெங்காயதாமரை மண்டிக்கிடப்பதால் அதனை தூய்மைபடுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நகராட்சி தலைவர் உடனடியாக தேளி குளத்தில் உள்ள வெங்காய தாமரைகளை அகற்ற உத்தரவிட்டதையடுத்து பணியாளர்கள் குளத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா , தக்கார் வேலுச்சாமி, கணக்கர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் செய்துவருகின்றனர்.