திருவாரூர்:
பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளமதகு பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஊர்குடி வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
பணிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்து கூறியதாவது:-
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் கொரடாச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டம் வெற்றிபெற பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு அறிவித்துள்ள நேரத்தினை விட கூடுதல் நேரம் பணி செய்து அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தித் தர வேண்டும்.
இப்பகுதி மக்கள் இதனை உறுதியாக ஏற்று பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலச்சந்தர், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, துணை தலைவர் தளபதி, செயல் அலுவலர் நாராயணமூர்த்தி மற்றும் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.