உள்ளூர் செய்திகள்

செங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்வு கூட்டம்

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மாலை மலர்

செங்கம்:

செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் முருகன் (செங்கம்), சக்கரை (தண்டராம்பட்டு), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் ரேணுகா (செங்கம்), சுகுணா (கீழ்பெண்ணாத்தூர்), பரிமளா (தி.மலை), வட்ட வழங்கல் அலுவலர்கள் முனுசாமி (செங்கம்), மணிகண்டன் (கீழ்பென்னாத்தூர்), வருவாய் ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செங்கம் தாசில்தார் முனுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டர் மந்தாகினியிடம் வழங்கினர்.

மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பரசுராமன், வருவாய்த்துறையினர், தமிழ்நாடு போக்குவரத்து துறை செங்கம் பணிமனை மேலாளர் சேட்டு உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.