கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம்

வருகிற 11-ந் தேதி நடக்கிறது கலெக்டர் முருகேஷ் தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருகிற 11-ந் தேதி கருணாநிதி அரசு கலைகல்லூரியில் கல்வி கடன் மேளா நடைபெற உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

அப்போது கூட்டத்தில் அவர் தெரிவித்தாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி என 31 கல்லூரிகள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிப்பு தொடர வேண்டுமென என்னிடம் கல்விகடன் நிதியுதவி கேட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியருக்கு அரசு வருடத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி ஓடுக்கீடு செய்கிறது.

அதன் அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரியில் சேர பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த இன்னல்களை போக்கிடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் கல்விகடன் மேளா வருகின்ற 11-ந் தேதி கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.

இந்த முகாம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

மேலும் மாணவர்களுக்கு https://www.vidyalakshmi.co.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான மாணவ, மாணவியர்களுக்கு தனி தனியே பதிவு செய்யும் மையம் அமைக்க உள்ளன. இந்த கல்விகடன் மேளாவில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி. இந்தியன் ஓவர்சீயஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, என 12 வங்கிகள் கலந்து கொள்ள உள்ளன.

இவ்வாறு அவர் பேசினர்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி). ரிஷப், , திட்ட இயக்குநர், மகளிர் திட்டம். ஸையித்சூலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.கௌரி, மற்றும் உயர் அலுவலர்கள், கல்லூரி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.