உள்ளூர் செய்திகள்

சாத்தனூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு

கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தாசில்தார்களுக்கு நீர்வளத் துறையினர் கடிதம்

திருவண்ணாமலை:

தென்பெண்ணையாறு நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று பிற்பகல் பிற்பகல் 2 மணி நிலவரப்படி விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

இதனால்,119 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 114 அடியை எட்டியது. அணையில் 6200 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.இதனால், பெண்ணையாற்று கரையோரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசில்தார்களுக்கு நீர்வளத் துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியுள்ளது. 119 அடி உயரத்தில் 5 அடி மட்டும் குறைவாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து ஏற்படும்போது, முழுமையாக திறந்துவிடப்படும்.

எனவே, சேதம் மற்றும் இழப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சாத்தனூர் அணை அதிகாரி தெரிவித்துள்ளதாவது:-

அணைக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்வரத்து திடீரென அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனால், அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென 117 அடியை எட்டிவிடும்.

அப்போது நீர்வரத்து தொடர்ந்தால், 11 கண் மதகுகள் வழியாக, தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். எனவே, 114 அடியை எட்டியுள்ள நிலையில், கரையோர கிராமங்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

மேலும், தென்பெண்ணை ஆற்றில் கால்நடைகளை குளிக்க வைக்கவும், மற்றும் துணி களை துவைக்கவும் கூடாது. இதேபோல், ஆற்றை கடந்து செல்லும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கும்.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

4 மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.