களக்காடு:
களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந்ஆதிநாராயண சுவாமி கோவிலில் ஆனிமாத தேரோட்டத் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. திருவிழாவின் 8-ம் நாளான கடந்த 7-ந் தேதி பரிவேட்டை விழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா 11-ம் நாளான நேற்று நடந்தது.
இதையொட்டி அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் இலவசமாக மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி தேர் நிலைக்கு வந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.