உள்ளூர் செய்திகள்

உயர்கோபுர மின்கம்பி அறுந்து வீடுகள் மீது விழுந்ததால் பரபரப்பு

எண்ணூர், அண்ணா நகர், சாஸ்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேல் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. வீடுகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மாலை மலர்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து எண்ணூர் ரெயில்வேக்கு ராட்சத உயர் மின் கோபுரம் மூலம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக எண்ணூர், அண்ணா நகர், சாஸ்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேல் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த போது உயர் மின் அழுத்த கோபுரத்தில் இருந்த மின்கம்பி திடீரென அறுந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது.

இதனால் அந்த இடத்தில் லேசாக தீப்பிடித்ததோடு அந்த பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. மின் கம்பி அறுந்து விழுந்ததும் மின்சப்ளை துண்டானதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வீடுகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மாற்று இடம் வழியாக மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.