உள்ளூர் செய்திகள்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமி வீடு முன்பு திரண்ட ஆசிரியர்கள்

பட்டதாரி ஆசிரியர்கள் 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் பட்டதாரி ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பால சேவிகா பணியாளர்கள் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட 288 பேர் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டு முன்பு திரண்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்த படியும், மழை கோட்டு அணிந்த படியும் அவர்கள் முதலமைச்சர் வீட்டு முன்பு காத்திருந்தனர்.

அப்போது அப்பா பைத்தியசாமி கோவிலில் முதலமைச்சர் பூஜை செய்து கொண்டிருந்தார். கோவிலுக்கு சென்ற ஆசிரியர்கள் முதலமைச்சரை சந்தித்து நாங்கள் 5 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்று அவர்களிடம் முதலமைச்சர் கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி தகவலறிந்து வந்த கோரிமேடு போலீசார் போராட்டம் நடத்த வந்த ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பினர்.

மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்த வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT