உள்ளூர் செய்திகள்

கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

யாகசாலை அமைத்து கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

அறந்தாங்கி:

அறந்தாங்கி தாலுகா அரசர்குளம் வடபாதியில் அமைந்து ஸ்ரீமகா முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்களால் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக யாகசாலை அமைத்து கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று வந்தது.

பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அப்பகுதியை சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்தனர். அவர்களுக்கு விழா குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.