உள்ளூர் செய்திகள்

'முருகா' எனும் பெயரில் பயிரிட்ட அரிசியை சுவாமிமலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய ஜப்பான் நடிகை

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் சிவத்தலங்களில் தரிசனம்.சித்தர்களால் கண்டறிந்து அடையாளப்படுத்தப்பட்ட மூலிகைகள் பயிரிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

சுவாமிமலை:

ஜப்பான் நாட்டின் டோக்கியோ பகுதியை சேர்ந்த பழம்பெரும் நடிகை வியாசாமிவசுகி. இவர் பெரும் பொருள், புகழ் ஆகியவற்றை நிறைவாகப் பெற்றிருந்த போதிலும் மன நிம்மதி இல்லாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் தமிழ் மொழியை கற்று தமிழகத்தில் வாழ்ந்து வந்த சித்தர்களின் பெருமையை அறிந்து அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக தனது பெயரை ஷன்மாதாஜி என மாற்றி அமைத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆன்மீக சுற்றுப்பயணமாக இலங்கை கண்டி கதிர்காம முருகன், தமிழகத்தில் உள்ள முருக கோயில்கள் மற்றும் சிவத்தலங்களில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். ஐந்து பேர் கொண்ட இக்குழுவினரை ஜப்பான் நாட்டில் 35 வருடங்களாக தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் வழி நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.

தமிழகத்திலிருந்து பெறப்பட்ட பொன்னி விதை நெல் ரகங்களை ஜப்பானில் முருகா எனும் பெயரில் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் பயிரிடப்படுவதாகவும், அதுபோல் சித்தர்களால் கண்டறிந்து அடையாள ப்படுத்தப்பட்ட மூலிகைகள் பயிரிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

முருகா எனும் பெயரில் பயிரிட்ட அரிசியை இன்று சுவாமி மலை முருகன் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளதாக கூறினர்.

தமிழக முதல்வரை சந்தித்து அவருக்கும் முருகா எனும் பெயர் கொண்ட அரிசியை வழங்க இருப்பதாக தெரிவி த்தனர்.

SCROLL FOR NEXT