மீன்பிடி துறைமுகத்தில் பாதைகள் விரிசலடைந்துள்ளது. 
உள்ளூர் செய்திகள்

தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்- மீனவர்கள் வலியுறுத்தல்

மீன்பிடி துறைமுகம் 2-வது முறையாக‌ சேதமடைந்துள்ளது.தூண்டில் வளைவில் தடுப்புச்சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக 1070 மீட்டர் தூரம் 15அடி உயரம், 6 மீட்டர் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் கடந்த 2020ல் ஏற்பட்ட புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

இந்நிலையில் கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் 2வது முறையாக‌ சேதமடைந்துள்ளது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது ஆறு மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாதை கடல் சீற்றம் காரணமாக 8 அடியில் இருந்து 10 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் தூண்டில் வளைவில் தடுப்பு சுவர் பாதைகள் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்வாங்கி சேதமடைந்து உள்ளது.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில்மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணியை தரமாக அமைக்காத காரணத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதில் நவீன தொழில்நுட்பம் செயல்படுத்தாமல் உள்ளது என மீனவர்கள் குற்றசாட்டி உள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.