தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் ஆடியோவை தொடங்கி வைத்தார். 
உள்ளூர் செய்திகள்

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆடியோவில் ஒலிக்கும் திருக்குறள்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தினமும் காலை, மாலை ஆடியோவில் திருக்குறள் ஒலிக்கிறது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 

தமிழ் மொழிக்கு என்று 1981-ம் ஆண்டு 1000 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு என்ற வார்த்தை வானிலிருந்து கீழே பார்த்தால் கட்டிடம் தெரியும் வகையில் அமைக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது.

பாராளுமன்ற கட்டிடம் போன்று பிரம்மாண்ட நூலகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த பல்கலைக்கழகத்தில் கலைப்புலம், மொழிப்புலம், அறிவியல் புலம், கல்வெட்டியல் துறை, சமூக அறிவியல் துறை, இசைத்துறை,  ஓலைச்சுவடி துறை என பல்வேறு துறைகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி படித்து வருகின்றனர்.

மேலும் ஆய்வு மாணவர்களும் ஆய்வு படைப்புகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் தினந்தோறும் ஆடியோவில் திருக்குறள் ஒலிக்கிறது.

1992-1995 ஆண்டுகளுக்குப் பிறகு  காலை மற்றும் மாலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரை இரு வேளைகளில் சுமார் 1 மணி நேரம் 10 திருக்குறள் மற்றும் அதன் பொருள் இசையுடன் ஒலிக்கிறது.

இதனால் அங்கு  விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், அப்பகுதிகளில் நடைப்பயிற்சி செல்வோர் மற்றும் பொதுமக்கள், குழந்தைகள், மாணவர்கள் திருக்குறளை கேட்டு அதன் பொருளை தெரிந்து கொள்கின்றனர். 

இதன் மூலம் திருக்குறளின் புகழ் வெளி உலகிற்கு கொண்டு செல்லப்படுகிறது. உலகப் பொதுமறையான திருக்குறள் காலை, மாலை ஒரு மணி நேரங்களில் ஒலிக்கப்படுவது பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.