தஞ்சை அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலைகழக நுழைவு வாயிலில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். 
உள்ளூர் செய்திகள்

தஞ்சை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் - தனியார் கல்லூரிக்கு நோட்டீஸ்

தஞ்சை அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்றக்கோரி தனியார் கல்லூரியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மாலை மலர்

வல்லம்:

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் தமிழக அரசின் திறந்தவெளிச் சிறைக்கு சொந்தமான நிலத்தில் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. 

இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு கடந்த 2018 அக்டோபர் 3&ம் தேதியுடன் காலக்கெடு முடிந்துவிட்டது. அப்போது இருந்த தாசில்தார் அருணகிரி பல்கலைக் கழகத்திற்கு சென்று அளவிடும் பணியை தொடங்கினார்.

பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதிடம் மாணவர்கள் படிக்க கூடிய நேரத்தில் இதுபோன்று கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கல்வி பாதிக்கப்படும் என மனு அளித்தனர். 

அந்த மனு மீதான விளக்கத்தை அளிக்க அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி திட்டம் விளக்கம் கேட்டபோது ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது.

மூன்றாண்டுகளில் அந்தக்குழு எந்த ஒரு விசாரணையும் நடத்தாத நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க அரசு அந்த குழுவை கலைத்துவிட்டு தமிழக அரசு நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

அக்குழு கடந்த ஆண்டு தஞ்சை வந்து சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில் 4 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதனை தஞ்சை துணை கலெக்டர் சுகபத்ரா, கோட்டாட்சியர் ரஞ்சித், தஞ்சை தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டு அதற்கான செலவுத் தொகை கல்லூரி நிர்வாகிகத்திடம் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.