ஆண்டவன்கோவில் பகுதியில் திருடப்பட்ட சோலார் சிக்னல் விளக்கு. 
உள்ளூர் செய்திகள்

சாலையில் அமைக்கப்பட்ட சோலார் சிக்னல் பேனல்கள் திருட்டு

பேராவூரணி பகுதியில் சாலையில் அமைக்கப்பட்ட சோலார் சிக்னல் பேனல்கள் திருடப்பட்டுள்ளதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர் பகுதி, பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டவன்கோவில், கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு, கட்டயங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய சாலை சந்திப்புகளில், விபத்துக்களை தடுக்கும் வகையில், ஆபத்தான இடம் என வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், சிக்னல் சிவப்பு விளக்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சோலார் பேனல் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

இது சூரிய ஒளியை கிரகித்து இரவு, பகல் எந்நேரமும் சிவப்பு விளக்கு விட்டுவிட்டு ஒளிர்கிறது. முக்கியமான நெருக்கடியான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இதனை கவனித்து வாகனங்களை கவனமுடன் ஓட்டிச் செல்கின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்த சோலார் பேனல்களை பல இடங்களில் மர்மநபர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். 

இந்த சோலார் பேனல்களை பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு வேண்டிய மின் விளக்கு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்பதால் இவற்றை மர்மநபர்கள் திருடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

இதனால், பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்ட சிறிது காலத்தில், வெறும் மின் விளக்குகள் மட்டுமே உள்ளன. சோலார் பேனல், அதனுடன் இணைக்கப்பட்ட பேட்டரி அமைப்புகள் திருடப்பட்டுள்ளன.

பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலையில், ஆண்டவன்கோவில் பகுதியில் மதுக்கடைகள் அமைந்துள்ள இடத்தில் இவ்வாறு சிக்னல்கள் திருடப்பட்டுள்ளது. 

பல்வேறு இடங்களில் இதே நிலை தான் உள்ளது. எனவே, “இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்ய வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT