தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த கொள்ளிடம் ஆற்றில் வாலிபர் பிணம் கிடப்பதாக திருவையாறு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு போலீசார் விசாரணை செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அரியலூர் மாவட்டம் கீழக்கவட்டான்குறிச்சி குந்தாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அசோகன் மகன் பிச்சைமணி (வயது 32) என தெரியவந்தது.
மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சைமணி ஐ.டி.ஐ படித்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு பணம் கொடுக்கவில்லை என கூறி கோபித்துக்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
ஐந்து வருடங் களுக்கு மேல் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளாமல் சிங்கப்பூரிலேயே பணிபுரிந்து வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பாக நான் ஊருக்கு வருகிறேன் என்று பிச்சைமணி அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்லாமல் தஞ்சை வந்தவர் ஒரத்தநாட்டிற்கு பஸ் மூலம் சென்று திரும்பி திருவையாறு விளாங்குடி சோதனைச்சாவடியில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் பிணமாக கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைமணி விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது மர்மநபர்கள் கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.