பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணி 
உள்ளூர் செய்திகள்

குறுகிய கால நெல் பயிரின் பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணி

கொல்லாங்கரையில் குறுகிய கால நெல் பயிரின் பாய் நாற்றாங்கால் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி பெற்றனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் 11 மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டையில் தங்கி முனைவர்ஆனந்தராஜா, முனைவர்.தங்கராஜ், முனைவர்செண்பகவள்ளி வழிகாட்டுதலின்படி பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஊரக வேளாண் பணி அனுபவமானது‌, வேளாண் மாணவர்களுக்கு கிராமங்களின் நிலையைப் பற்றி அறியவும், விவசாயிகளின் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான தீர்வை நல்குவதாகும். அதன் ஒரு பகுதியாக கொல்லாங்கரை என்னும் கிராமத்தில்  குறுகிய கால நெல் பயிரின் பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

14-20 நாட்களில் வீரியமுள்ள நெல் நாற்றுக்களைப் பெற இம்முறை ஏற்றது. சமப்படுத்தப்பட்ட தரையிலோ, வயலிலோ  நெகிழித்தாள் பரப்ப வேண்டும். தாளின் மீது மரச் சட்டத்தை (1.0 மீநீளம், 0.5 மீ அகலம், 4.0 செமீ உயரம்) வைத்து, அதில் வளமான மண் கலவையைப் பரப்ப வேண்டும். 

24 மணி நேரம் விதைகளை ஊற வைத்து, பின்னர் நீரை வடித்து 24 மணி நேரம் காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும். முளை கட்டிய விதைகளை மரச்சட்டத்தில் உள்ள மண் கலவையின் மீது சீராகத் தூவ வேண்டும். விதைகளை மேலாக அழுத்திவிட்டு, மரச்சட்டத்தை எடுத்து விடவேண்டும். பின் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க வைக்கோலைப் பரப்பிவிட வேண்டும். முதல் ஐந்து நாட்களுக்கு பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். 

பின்பு நாற்றுகள் மூழ்காதவாறு சீராக நீர் பாய்ச்ச வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டது.