பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி நகரில் பிரதான கடைவீதியில் நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமிப்புக்களை கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை அகற்றினார்கள். கடைகளின் முன் பகுதியில் சிமெண்ட் ஆல் போடப்பட்ட தளங்களை இடித்தனர்.
மேலும், தரைக்கடியில் போடப்பட்ட மின்சார கேபிள்கள் மிச்சங்கள் சாலை ஓரங்களில் கிடக்கின்றன. அதுபயனுள்ளதா?பயனற்றதா? என்பது தெரியாமல் அப்படியே உள்ளது.
மேலும் காவிரி பாலத்தின் அருகில் இருந்து பழமார்நேரி சாலை திருப்பம் வரை இரு புறங்களிலும் 7-க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்களை அகற்றி சாலை ஓரத்தில் அமைக்க வேண்டும். மின் கம்பங்கள் மாற்ற தாமதம் ஏற்பட்டால் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றி பயனில்லை. மின்சார துறை உடனடியாக செயல்பட்டு மின்கம்பங்களை சாலை ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியால் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடத்தின் நுழைவு பகுதி இடிக்கப்பட்டது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் உடைந்த பகுதியில் தகர ஷீட் கொண்டு அடைந்துள்ளனர். எந்த நோக்கத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதோ அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காலதாமதம் செய்தால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது தொடர்கதை ஆகிவிடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.