கீழக்காடு ரெயில்வே கீழ் பாலத்தை கோட்டாட்சியர் பிரபாகரன் ஆய்வு செய்தார். 
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே கீழ் பாலங்கள் ஆய்வு

பேராவூரணி பகுதியிலுள்ள ரெயில்வே கீழ்பாலங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

மாலை மலர்

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே படப்பனார்வயல் கிராமத்தில் அமைந்துள்ள உள்ள சொர்ணக்காடு செல்லும் சாலையில், காரைக்குடி & திருவாரூர் அகல ரெயில்பாதை வழித்தடத்தில், ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளது. தற்போது இதனருகே ரயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

முறையான வடிவமைப்பு இல்லாமல், பாலம் பாம்பு போல் வளைந்து, நெளிந்து இருப்பதால், பஸ்கள், டிராக்டர், கதிர் அறுக்கும் எந்திரம் போன்றவை பாலத்தை கடந்து செல்ல முடியாமல், நடுவில் சிக்கிக் கொள்கிறது. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதையடுத்து இந்தப் பாலத்தை பயன்படுத்தும் சொர்ணக்காடு, வளப்பிரமன்காடு, மணக்காடு, மாத்தூர் ராமசாமிபுரம், ரெட்டவயல், பின்னவாசல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள் குறித்து கோட்டாட்சியரிடம் தெரிவித்தனர்.

மேலும் தற்போது புதிதாக ஆத்தாளூரில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடி விட்டு அதனருகே ரயில்வே கீழ் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பணிகள் தொடங்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆய்வுக்காக வந்த கோட்டாட்சியரை ஆத்தாளூர் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன், ராஜரத்தினம், இளஞ்செழியன், சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், ரவிச்சந்திரன் மற்றும் கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன், ரவி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

அப்போது, இப்பகுதியில் புதிதாக கீழ்பாலம் அமைக்கப் பட்டால் ஆத்தாளூர் வீரகாளி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படக்கூடும்.