அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் அலையாத்தி காடுகள் திருவாரூர் மாவட்ட எல்லையான முத்துப்பேட்டை முதல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் வரை கடற்கரையை ஒட்டி அரணாக அமைந்துள்ளது.
அலையாத்தி காடுகளால் கடலுக்கும் கடற்கரைப் பகுதி மக்களுக்கும் ஏராளமான நன்மைகள் உண்டு. கடலில் விழுகின்ற அலையாத்தி இலைகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு இரையாக பயன்படுகிறது. அதேபோல கடலில் ஏற்படும் புயல் மற்றும் சுனாமி உள்ளிட்டவை களிலிருந்து கடலோர மக்களை காக்கும் அரணாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, முடுக்குக்காடு, கருங்குளம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதாவது டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் என்பதால் வெளிநாட்டு பறவைகள் வருகை தருவது உண்டு.
இந்த காலங்களில் ஜப்பான், மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மாலத்தீவு, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இந்த மழை காலங்களில் அந்தநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக அலையாத்தி காடுகளுக்கு வருகைதந்து இங்கேயே தங்கி இருந்துவிட்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்னர் மீண்டும் புறப்பட்டு சென்று விடும்.
இந்நிலையில் தற்போது இங்கு வரும் பறவைகளை இறைச்சிக்காகப் பிடித்து விற்பனை செய்வோர், வலை உள்ளிட்ட சாதனங்களுடன் தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில்:-
அதிராம்பட்டினம் பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, பறவைகள் பிடிப்போர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வாறு பிடிக்கப்பட்ட பறவைகள் பறிமுதல் செய்து, மீண்டும் பறக்க விடப்படும்.
பறவைகளை பிடிப்பது குற்றம் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, வனத்துறையினருக்கு வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு இடங்களில் பறவைகள் பிடிக்கப்படுவது குறித்து, தகவல் தெரிவிக்கும் வகையில் தொடர்பு எண் வெளியிடப்பட வேண்டும். பறவைகள் பிடிப்போர் குறித்து, கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றனர்.