பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணி, முத்துப்பேட்டை, வேதாரண்யம், அதிராம்பட்டினம், நாடிமுத்து நகர் உள்ளிட்ட 7 துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நாளை 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது.
முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம். பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50, பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த சிறப்பு முகாம் வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.