உள்ளூர் செய்திகள்

திருநீர்மலை பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மறு சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனும் உள்ளது. சுமார் 20-க் கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

நள்ளிரவு திடீரென பிளாஸ்டிக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென தீ பரவி அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திலும் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

தீ விபத்து ஏற்பட்டபோது குடோனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் உள்ளே இருந்துள்ளனர். குடோனில் தீப்பற்றியதும் அவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். உடனடியாக அவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.